செய்திகள்
புதுவையில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
புதுவையில் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் நாட்டார் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுதா (வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுதா அரியாங்குப்பத்தில் உள்ள மிட்டாய் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த கடையில் வேலைசெய்யும் மற்றொரு ஊழியருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி சுதா திடீரென்று மாயமானார். அதன்பின் கடந்த 30-ந்தேதி அவர் வீடு திரும்பினார். அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்த அவரது அண்ணன் சதீஷ்குமார் அறிவுரை கூறியுள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுதா சாகமுடிவெடுத்து தலையில் தடவும் ஹேர்டையை எடுத்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சுதா பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.