செய்திகள்
உயிரிழப்பு

புழல் போலீஸ் நிலையத்தில் பணியின்போது போலீஸ் ஏட்டு திடீர் உயிரிழப்பு

Published On 2020-10-27 02:40 GMT   |   Update On 2020-10-27 02:40 GMT
புழல் போலீஸ் நிலையத்தில் பணியின்போது போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
செங்குன்றம்:

சென்னையை அடுத்த அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (வயது 40). இவர், புழல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கலியமூர்த்தி, போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகபோலீசார் உடனடியாக அவரை மீட்டு செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், போலீஸ் ஏட்டு கலியமூர்த்தி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்தாரா?, இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன போலீஸ் ஏட்டு கலியமூர்த்திக்கு ஷீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். போலீஸ் நிலையத்தில் பணியின்போது ஏட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News