செய்திகள்
மரணம்

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம்பெண் திடீர் மரணம்- தனியார் மருத்துவமனை முற்றுகை

Published On 2020-10-22 12:25 GMT   |   Update On 2020-10-22 12:25 GMT
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம்பெண் திடீரென்று உயிரிழந்தார்.
புதுச்சேரி:

புதுச்சேரி பாக்கமுடையான்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). பொக்லைன் எந்திர ஆபரேட்டர், இவரது மனைவி விஜயலட்சுமி (20). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கர்ப்பமடைந்த விஜயலட்சுமி கொக்குபார்க்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கருக்குழாயில் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன், விஜயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி திடீரென்று உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் விஜயலட்சுமி இறந்துவிட்டதாக கூறி தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்து வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், கோரிமேடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன்பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News