செய்திகள்
திருட்டு

லாக்கரை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை- மர்மநபர்களுக்கு வலைவீச்சு

Published On 2020-10-17 09:16 GMT   |   Update On 2020-10-17 09:16 GMT
அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து லாக்கரை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (வயது 64). இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள உறவினரின் விசேஷ நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

இந்தநிலையில் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர்.நகரில் வசிக்கும் திருஞானசம்பந்தத்தின் 2-வது மகள் ஷாலினி, தனது தந்தை வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு கிடந்தது.

லாக்கரில் இருந்த 30 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஷாலினி, அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா ஆகியோர் விரைந்து வந்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News