செய்திகள்
கைது

குன்னூரில் கஞ்சா செடிகள் வளர்த்த 2 பேர் கைது

Published On 2020-10-14 09:00 GMT   |   Update On 2020-10-14 09:00 GMT
குன்னூரில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனை செய்தவரும் பிடிபட்டார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சமீப நாட்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தெரிகிறது. இதற்கிடையே சட்ட விரோதமாக வீடுகளில் கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதுடன், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து குன்னூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் சித்தி விநாயகர் கோவில் தெரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வீடுகள் முன்பு பூந்தொட்டிகளில் கஞ்சா செடிகள் வளர்ப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அன்புமணி (வயது 40) , சிவா (40) ஆகிய 2 பேரை கைது செய்ததுடன், அவர்கள் வளர்த்து வந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதே பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வினோத் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேரையும் போலீசார் குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் அருகே ஒரு கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News