செய்திகள்
பண்ருட்டி அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தில் ஒருவர் டாக்டருக்கு படிக்காமலேயே தனது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது. இது குறித்த தகவலின் பேரில் காடாம்புலியூர் போலீசார், அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று அங்கிருந்த வைதேகி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் பண்ருட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்ததும், பின்னர் அங்கு வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டதும் தெரிந்தது.
மேலும் அந்த மருத்துவமனையில் வேலைபார்த்த அனுபவத்தை வைத்து அவர் தனது வீட்டிலேயே பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைதேகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.