செய்திகள்
காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்- கலெக்டர் அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்க கோட்ட அளவில் வாணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அறிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொது மக்களிடம் நோய் பரவாமலும், அவர்களின் நலன் கருதியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று, காணொலி காட்சி மூலம் குறைகேட்பு கூட்டம் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தற்போது பஸ் போக்குவரத்து வசதி காரணமாக பொதுமக்கள் காணொலி காட்சி மூலம் நடக்கும் குறைகேட்பு கூட்டத்தில், அதிக அளவில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகின்றனர். இதன் காரணமாக கொரானா நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திடவும், பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்வு காணவும், மற்றும் அவர்களின் போக்குவரத்தை குறைத்திடவும், கோட்ட அளவில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் காணொலி காட்சி மூலம் குறைகேட்பு கூட்டத்தை நடத்த தொடர்புடைய கடலூர் கோட்டாட்சியர், சிதம்பரம் சப்-கலெக்டர் மற்றும் விருத்தாசலம் சப்-கலெக்டர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி நோய் தொற்று பரவாமல் கவனமாக இருக்கவும், கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் திங்கட்கிழமை தோறும் தொடர்புடைய கோட்டாட்சியர் மற்றும் சப்-கலெக்டர்கள் அலுவலகத்தில் நடைபெறும் காணொலி காட்சி குறை கேட்பு கூட்டத்தில் மனு செய்து பயன் பெற வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.