செய்திகள்
விபத்து

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ.தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2020-09-12 09:37 GMT   |   Update On 2020-09-12 09:37 GMT
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள முளப்பாக்கம் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது45). மணல் லாரி டிரைவர் சங்க முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய இளைஞர் அணி பொருளாளருமான இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மூங்கில் தோட்டம் கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ரெயிலடி தெரு பிள்ளையார் கோவில் அருகே அவர் சென்ற போது எதிரே சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பாஸ்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாஸ்கர் உடலுக்கு நேற்று முன்னாள் அமைச்சர் கே. ஏ.ஜெயபால் உள்பட அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News