செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சீபுரம் வருகை

Published On 2020-09-10 18:52 GMT   |   Update On 2020-09-10 18:52 GMT
நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சீபுரம் வருகை தருகிறார்.
காஞ்சீபுரம்:

நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சீபுரம் வருகை தருகிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தர உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



பின்னர் கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காஞ்சீபுரத்திற்கு வருகை தருகிறார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். பின்னர் அவர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதே விழாவில் காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்ப்பூரில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சீபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட தாசில்தார் அலுவலகங்களையும் திறந்து வைக்கிறார்.

மொத்தம் ரூ.260 கோடியே 46 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இவை தவிர காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சீபுரம் வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காஞ்சீபுரம் சுற்றுலா மாளிகையில், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வி.சோமசுந்தரம், சிட்லபாக்கம் ராசேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வரவேற்பு அளிக்கின்றனர்.
Tags:    

Similar News