செய்திகள்
கோப்புபடம்

புதுவை அருகே பயங்கரம் - பிரபல ரவுடி வெட்டி கொலை

Published On 2020-08-28 15:15 GMT   |   Update On 2020-08-28 15:15 GMT
புதுவை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதராப்பட்டு:

புதுவை தர்மாபுரி கல்மேடுபேட் பகுதியை சேர்ந்தவர் கோபால்தாஸ் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. தற்போது தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு மாலதி, ஜெயந்தி ஆகிய மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி புதுவை அருகே தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர்.

ஜெயந்திக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். எனவே 2 மகள்களும் பூத்துறையில் உள்ள உறவினர் வீட்டில் உள்ளனர். பூத்துறைக்கு கோபால்தாஸ் தனது மகள்களை பார்ப்பதற்காக புதுவையில் இருந்து அடிக்கடி வருவது உண்டு.

அதன்படி நேற்று இரவு கோபால்தாஸ் பூத்துறை வந்தார். தனது மகள்களை பார்த்துவிட்டு புதுவை புறப்படும்போது திடீரென பலத்த மழை பெய்தது. எனவே கோபால்தாஸ் தனது மகள்கள் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டில்போட்டு படுத்திருந்தார்.

அப்போது 4 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் கையில் கத்தி மற்றும் அரிவாள்கள் வைத்திருந்தனர். இவர்களை பார்த்ததும் கோபால்தாஸ் அங்கிருந்து ஓட முயன்றார்.

கண் இமைக்கும்நேரத்தில் அந்த கும்பல் கோபால்தாசை சரமாரியாக வெட்டியது. அதன் பின்னர் அந்த கும்பல் கோபால்தாஸ் தலைமீது கற்களை தூக்கி போட்டது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தவாறு பிணமானார்.

மழைநீருடன் சேர்ந்து ரத்தமும் கலந்து ஓடியது. தங்களது திட்டம் நிறைவேறியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. சத்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்த கோபால்தாசின் மகள்கள் ஓடிவந்தனர். தனது தந்தை பிணமாக கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம், வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கோபால்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கொலையாளிகள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது பூத்துறையில் இருந்து புதுவை செல்லும் சாலையில் ஓடி நின்றது. எனவே கொலை யாளிகள் அந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுக்கு முன்பு கூடப்பாக்கத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மாயவன் என்பவரை கோபால்தாஸ் வெட்டி கொலை செய்துள்ளார். எனவே மாயவன் கூட்டாளி கள்தான் பழிக்குபழியாக இந்த கொலையை செய்தி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபால்தாஸ் அய்யங்குட்டி பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

எனவே இந்த சம்பவத்தின் காரணமாக கோபால் தாசை வெட்டி கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் பூத்துறை மற்றும் கல்மேடுபேட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News