வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 22). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூரில் அரசு பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த உசிலம்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த மரியா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இந்த காதலுக்கு மரியா வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். தற்போது சென்னையில் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மாதவனிடம் இது குறித்து மரியா தெரிவித்தார். இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நிலக்கோட்டையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேசினர். பெண் வீட்டார் சம்மதிக்க வில்லை. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என பெற்றோர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.