செய்திகள்
தனது மகளுடன் கிரிக்கெட் வீரர் டோனி இருப்பதுபோல் போர்வையில் வடிவமைக்கப்பட்ட உருவப்படம்.

கைத்தறி போர்வையில் டோனியின் உருவத்தை வடிவமைத்த வடிவமைப்பாளர்

Published On 2020-08-23 05:33 IST   |   Update On 2020-08-23 05:33:00 IST
மகேந்திர சிங் டோனி தனது மகளுடன் இருப்பது போன்ற உருவ படத்தை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக உருவாக்கியுள்ளார்.
சென்னிமலை:

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் அப்புசாமி. இவர் சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏற்கனவே கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் உருவ படத்தை வடிவமைத்து அதை திரைச்சீலையில் உருவாக்கினார். பின்னர் அந்த திரைச்சீலையை சச்சின் தெண்டுல்கரிடம் நேரில் கொடுத்து பாராட்டு பெற்றார். இதுபோல் அப்புசாமி பலருடைய உருவ படங்களை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக தயார் செய்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி தனது மகளுடன் இருப்பது போன்ற உருவ படத்தை வடிவமைத்து அதனை கைத்தறி நெசவு மூலம் போர்வையாக உருவாக்கியுள்ளார். இதுகுறித்து வடிவமைப்பாளர் அப்புசாமி கூறுகையில், ‘கிரிக்கெட் வீரர் டோனியும், அவரது மகளும் தந்தை-மகள் பாசத்தை பிரதிபலிப்பது போல் ஒன்றாக உள்ள புகைப்படத்தை 15 நாட்கள் கைக்கோர்வை மூலம் வடிவமைத்தேன்.

பின்னர் அதை 47 அங்குல அகலம், 44 அங்குல நீளத்தில் கைத்தறி மூலம் போர்வையாக உருவாக்கினேன். இந்த போர்வையின் எடை 430 கிராம் ஆகும். இந்த போர்வையை ஐ.பி.எல். போட்டியின் போது டோனியை நேரில் சந்தித்து வழங்க இருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருப்பதால், வழங்க முடியவில்லை. இந்த நிலையில் டோனி ஓய்வு அறிவித்து விட்டதால் அவருடைய நினைவு பரிசாக நேரில் சந்தித்து வழங்க உள்ளேன்’ என்றார்.

Similar News