செய்திகள்
கைது செய்யப்பட்ட தொழிலாளி

திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் - தொழிலாளி போக்சோவில் கைது

Published On 2020-08-22 15:15 IST   |   Update On 2020-08-22 15:15:00 IST
ஈரோடு அருகே சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குணதலைப்பாடி இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 20). இவர் பல்லடம் பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் ஈரோட்டை சேர்ந்த 15 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார்.

அப்போது இளவரசன் சிறுமியிடம் பழகி வந்துள்ளார். பின்னர் 2 பேரும் மாயமானார்கள். இதனால் சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இளவரசனும், சிறுமியும் ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இளவரசனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இளவரசன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும், பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி ஈரோட்டில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Similar News