செய்திகள்
கோட்டூர் அருகே மதுக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

கோட்டூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-22 13:45 IST   |   Update On 2020-08-22 13:45:00 IST
கோட்டூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தில் புதிதாக அரசு மதுக்கடை திறக்கப்பட்டது. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மதுக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் ஜனநாயக விவசாயிகள் இயக்க மாவட்ட அமைப்பாளர் தங்கவேல், கிராமபுற ஜனநாயக தொழிலாளர் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வாசகன், போராட்ட குழு ஒருங்கினைப்பாளர் தங்க தமிழ்வேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மதுக்கடை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை அகற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி, கோட்டூர் இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு கூறினர். அப்போது தங்கவேல், வாசகன், தங்கதமிழ்வேலன் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News