செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்தது

Published On 2020-08-17 16:43 IST   |   Update On 2020-08-17 16:43:00 IST
பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது.
பவானிசாகர்:

ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக பவானிசாகர் அணையாக உள்ளது. இதன் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 9-ந் தேதி பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து 14-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 548 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 678 கனஅடி தண்ணீர் வந்தது. அதே நேரம் கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது.

Similar News