செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: ஒரே நாளில் 103 பேருக்கு தொற்று - 4 பேர் பலி

Published On 2020-08-17 01:32 IST   |   Update On 2020-08-17 01:32:00 IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கிறது. ஒரே நாளில் 103 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. 4 பேர் பலியானார்கள்.
ஈரோடு:

கொரோனாவின் தாக்கம் ஈரோடு மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஒற்றை அல்லது இரட்டை இலக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த 14-ந் தேதி புதிய உச்சமாக 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் மீண்டும் கொரோனா தனது விஸ்வரூப முகத்தை காட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,445 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம், கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, சூரம்பட்டி, கணபதிநகர், சின்னமுத்துவீதி, இந்திரா வீதி, சோழா நகர், வெட்டுக்காட்டுவலசு, வைரபாளையம், சூளை வி.ஜி.பி.நகர், கிருஷ்ணம்பாளையம், சாஸ்திரிநகர், மூலகவுண்டன்பாளையம், கொங்கம்பாளையம், மூலப்பாளையம், கோணவாய்க்கால், கருங்கல்பாளையம், திருநகர்காலனி, ரங்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், அம்பிகைநகர், இந்திராநகர், திண்டல், காமதேனுநகர், காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 54 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள்.

இதேபோல் பவானியில் 10 பேரும், சென்னிமலையில் 2 பேரும், சித்தோட்டில் 5 பேரும், கோபிசெட்டிபாளையத்தில் 4 பேரும், கொடுமுடியில் 7 பேரும், மொடக்குறிச்சியில் 5 பேரும், பெருந்துறையில் 6 பேரும், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இதில் 42 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போதுவரை 895 பேர் குணமடைந்து உள்ளனர். 526 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டத்தில் கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 பேர் பலியானார்கள். இதில் பெருந்துறையை சேர்ந்த 53 வயது நபர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 12-ந் தேதி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் 13-ந் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் பவானியை சேர்ந்த 67 வயது முதியவர், ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், நம்பியூரை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் 3 பேரும் கடந்த 14-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். 4 பேர் உயிரிழந்ததால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

Similar News