செய்திகள்
அந்தரத்தில் தொங்கியபடி மின்வாள் மூலம் வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர் ஈடுபட்ட காட்சி.

ஊட்டியில் சூறாவளி காற்று - அரசு ஆஸ்பத்திரி சாலையில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்

Published On 2020-08-11 13:42 IST   |   Update On 2020-08-11 13:42:00 IST
ஊட்டியில் வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தீவிரமடைந்து பெய்தது. இதனால் ஊட்டி-கூடலூர் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சேதம் அடைந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தொடர் மழையால் சாலையோரத்தில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டியில் சூறாவளி காற்று வீசியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த ராட்சத மரம் பெரியதாக இருந்ததால் அருகே இருந்த கேரட் தோட்டத்தில் மரக்கிளைகளும் விழுந்து கிடந்தன. நள்ளிரவில் விழுந்த மரம் அருகே உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தனியார் காட்டேஜ் மீது விழவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஊட்டி மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து ராட்சத மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரக்கிளைகள் மின்வாள் மூலம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் அடிப்பகுதி பெரிய அளவில் இருந்ததால் மின்வாள் மூலம் வெட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் கொக்கியில் தீயணைப்பு வீரர் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி மின் வாள் மூலம் மரத்தை வெட்டினார். சரிவான பகுதியில் உடலில் கயிறு கட்டி பின்னால் வீரர்கள் பிடித்துக்கொண்டனர். பின்னர் படிப்படியாக மரம் துண்டு, துண்டாக வெட்டி அகற்றப்பட்டது. அதனால் மதியத்திற்குப் பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் நோயாளிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வளாகத்தில் உள்ள அபாயகரமான 8 மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-3.1, நடுவட்டம்-17, அவலாஞ்சி-35, அப்பர்பவானி-25, பர்லியார்-35, எடப்பள்ளி-62, கூடலூர்-13, தேவாலா-121, பந்தலூர்-72, சேரங்கோடு-58 உள்பட மொத்தம் 526.6 பதிவாகி உள்ளது. இதன் சராசரி 18.1 ஆகும். அதிகபட்சமாக தேவாலாவில் 12 சென்டி மீட்டர் மழை கொட்டி இருக்கிறது. மழை குறைந்ததால் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Similar News