செய்திகள்
ஆசிட் ஊற்றப்பட்டதால் ஓலைகள் கருகி காணப்படும் பனை மரங்களை படத்தில் காணலாம்.

டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்கள் அழிப்பு

Published On 2020-08-10 15:10 IST   |   Update On 2020-08-10 15:10:00 IST
டி.என்.பாளையம் அருகே ஆசிட் ஊற்றி பனை மரங்களை அழித்த நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
டி.என்.பாளையம்:

கோபியை அடுத்த டி.என்.பாளையம் பகுதியில் அரக்கன்கோட்டை கிளை வாய்க்கால் செல்லும் வழியில் இருபுறமும் பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்து உள்ளன.

அதிலும் குறிப்பாக ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் வளர்ந்த பனை மரங்களின் குருத்துக்களை வளரவிடாமல் மர்ம நபர்கள் ஆசிட் ஊற்றி அழித்து வருகின்றனர். இதனால் பனைமரத்தின் ஓலைகள் கருகிவிட்டன.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கூறுகையில், ‘அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் உள்ள பனை மரங்களை சிலர் ஆசிட் ஊற்றி அழித்து வருகிறார்கள். என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அதுமட்டுமின்றி தனியார் ஒருவர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ளார். எனவே பனை மரங்கள் மீது ஆசிட் ஊற்றி அழிப்பவர்கள் மீதும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரியும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளோம்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்,’ என்றனர்.

Similar News