செய்திகள்
அய்யன்கொல்லி பதப்படுத்தும் கிடங்கில் 40 டன் வாழைத்தார்கள் கொள்முதல்
அய்யன்கொல்லி பதப்படுத்தும் கிடங்கில் இருந்து 40 டன் வாழைத்தார்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 டன் அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கூடலூர்:
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் ஆண்டு முழுவதும் நேந்திரன்வாழைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. அண்டை மாநில கேரளாவில் நேந்திரன் வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பதற்காக அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் விளைச்சல் அதிகமாக உள்ள காலக்கட்டங்களில் விவசாயிகளுக்கு போதிய விலையும் கிடைப்பது இல்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். மேலும் அறுவடை செய்த விளைபொருட்களை பதப்படுத்தி சேமித்து வைத்து விலை கிடைக்கும் நாட்களில் விற்பனை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கூடலூர் வேளாண் விற்பனை வணிகத்துறை ரூ.6 கோடி நிதி ஒதுக்கியது. தொடர்ந்து அய்யன்கொல்லி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் கிடங்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக கிடங்கு திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. தொடர்ந்து மாங்கோடு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதியில் இருந்து இதுவரை 100 டன் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வேளாண் துணை இயக்குனர் வடிவேல், வேளாண் அலுவலர் கலைவாணி, உதவி அலுவலர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் நேந்திரன் வாழைத்தார்கள் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலால் இயல்பு நிலை திரும்பாததால் விளைபொருட்களை விவசாயிகள் சேமித்து வருகின்றனர். இதுவரை 40 டன் வாழைத்தார்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 5 டன் வாழைத்தார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தைகள் போக மீதமுள்ள வாழைத்தார்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியில் வேளாண் விற்பனை வணிகத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வேளாண் விற்பனைத்துறையினர் கூறியதாவது:- அய்யன்கொல்லியில் ரூ.6 கோடி செலவில் கட்டி செயல்பட்டு வந்துள்ள பதப்படுத்தும் கிடங்கில் காய்கறிகள், வாழைத்தார்கள் சேமித்து வைக்கப்படுகிறது.
சந்தை நிலவரப்படி சரியான நேரத்தில் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை விற்பனை செய்வதால் வெளிமார்க்கெட் விலையை விட விவசாயிகளுக்கு கூடுதலாக விலை கிடைக்கிறது. இதனால் அவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை 40 டன் வாழைத்தார்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் 5 டன் வாழைத்தார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விளைபொருட்களை பதப்படுத்தும் கிடங்கில் சேமித்து வைத்து பயன் அடையும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.