செய்திகள்
குன்னூரில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலைக்கு எதிராக குன்னூரில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:
அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் குறைவான தொழிலாளர்களை கொண்டு சமூக இடைவெளியை பின்பற்ற படாமல் பணி மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சாலை பொது மேலாளர் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்தார். அப்போது தொழிற்சங்க நிர்வாகிகளில் சிலர் தமிழில் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது பொது மேலாளர் தமிழில் பேச தடை விதித்து இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச கூறினார். தமிழில் பேச மறுப்பு தெரிவித்த தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி மறுநாள் பொது மேலாளரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொது மேலாளர் தமிழில் பேச தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நேற்று குன்னூர் வி.பி.தெருவில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டுகட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொது மேலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வெடி மருந்து தொழிற்சாலை பொது மேலாளரை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமசந்திரன் ‘திராவிடர் கழகத்தை சேர்ந்த டாக்டர் கவுதமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுதாகர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனை சேர்ந்த ராஜேந்திரன் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.