செய்திகள்
காட்டுயானைகள் சேதப்படுத்திய ஆட்டோவை படத்தில் காணலாம்.

கூடலூர் அருகே ஆட்டோவை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்

Published On 2020-07-12 11:46 GMT   |   Update On 2020-07-12 11:46 GMT
கூடலூர் அருகே ஆட்டோவை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்:

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் குட்டியுடன் 3 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் முகாமிட்டது. இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர். இதற்கிடையில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் நின்றிருந்த பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை காட்டுயானைகள் தின்றன. மேலும் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதில் சதீஷ் என்பவரது ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. விடிய, விடிய அப்பகுதியிலேயே முகாமிட்ட காட்டுயானைகள், அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சேதம் அடைந்த ஆட்டோவை பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த ஆட்டோவை சரி செய்ய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறையிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மளிகை கடைகள், வாகனங்கள், பயிர்களை சேதப்படுத்தும் செயலில் காட்டுயானைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அவை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எந்த பலனும் இல்லை. எனவே காட்டுயானைகள் ஊருக்கு வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோன்று பாடந்தொரை பகுதியில் தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்து, வாழைகளை சேதப்படுத்தின. இதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறையிடம் மனு அளித்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.
Tags:    

Similar News