செய்திகள்
வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கை காணலாம்

வண்டிசோலையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கு

Published On 2020-07-08 20:37 IST   |   Update On 2020-07-08 20:37:00 IST
வண்டிசோலையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கை பிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை உணவு தேடி நகர பகுதிகளிலும் சுற்றித்திரிகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து தின்றும், சிதறடித்தும் அட்டகாசம் செய்கின்றன. இது தவிர மேற்கூரைகளில் ஏறி விளையாடுவதோடு கேபிள் மற்றும் போன் ஒயர்களை துண்டித்து விடுகின்றன. சில நேரங்களில் மின் ஒயர்களை அறுக்க முயன்று, குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குன்னூர் அருகே வண்டிசோலை குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வாயில் காயத்துடன் குரங்கு ஒன்று சுற்றித்திரிகிறது. இதற்கு எப்படி காயம் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. எனினும் உணவு தேடி தின்ன முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. எனவே அந்த குரங்கை பிடித்து, வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அந்த குரங்குக்கு மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டதா? அல்லது நாட்டு வெடி வெடித்து காயம் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. உணவு தின்ன முடியாமல், உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இப்படியே விட்டால் குரங்கு உயிரிழக்க நேரிடலாம். அதற்கு முன்பாக குரங்குக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News