செய்திகள்
போலீஸ் குழு

புதுவையில் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க போலீஸ் குழு

Published On 2020-07-08 06:32 GMT   |   Update On 2020-07-08 06:32 GMT
புதுவையில் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே நடமாடினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒருவர் கொரோனாவால் பாதித்தால் அவரது வீட்டருகே சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு உள்ள பகுதியை கட்டுப்பாட்டுப் மண்டலமாக அறிவித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அதையும் மீறி சிலர் வெளியில் நடமாடுவது தெரியவந்து உள்ளது. இதனால் அந்த நபர்களால் பிறருக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது.

இதை தடுக்கும் விதமாக புதுவை காவல் துறையில் கோவிட் 19 வார்ரூம் என்று கட்டுப்பாட்டு அறை என்று புதிதாக குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி மற்றும் சைபர் கிரைம் போலீசார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்களின் குறித்த முழு விவரங்களையும் திரட்டி தங்கள் கைவசம் வைத்துக்கொள்வார்கள். அதைக்கொண்டு அவர்கள் வெளியில் எங்கேயேனும் நடமாடுகிறார்களா? என்பதை உன்னிப்பாக கவனித்து வருவார்கள். அவ்வாறு யாரேனும் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் யாரேனும் அதைத்தாண்டி வெளியே நடமாடினால் 112, 100, 1031 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News