செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்

ஈரோட்டில் கடந்த மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7,685 பேர் மீது வழக்கு

Published On 2020-07-07 11:36 GMT   |   Update On 2020-07-07 11:36 GMT
ஈரோட்டில், கடந்த மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 ஆயிரத்து 685 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த கோரியும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் ஈரோடு மாநகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தல், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டி வருபவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மாதம் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல்வேறு வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அதிக பாரம் ஏற்றி வந்தவர்கள் 12 பேர். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்தவர்கள் 20 பேர். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் 101 பேர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிவந்தவர்கள் 3 ஆயிரத்து 719 பேர். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் 651 பேர் உள்பட மொத்தம் 7 ஆயிரத்து 685 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாகன ஓட்டிகளிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News