செய்திகள்
கொலை நடந்த இடத்தை அன்பழகன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பார்வையிட்டனர்.

பிரபல ரவுடி கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-06-30 06:57 GMT   |   Update On 2020-06-30 06:57 GMT
புதுவையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது பிணத்தை ரோட்டில் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை தோப்பு மாரியம்மன் கோவில் அருகே மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, தலையில் வெட்டு காயங்கள் இருந்தன. முகம் சிதைக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டு இருந்தது.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் பிணமாக கிடப்பவர் யார்? என்பது குறித்து விசாரித்தனர்.

சம்பவ இடத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான அன்பழகனும் விரைந்து வந்தார். கொலை நடந்தது குறித்து அவர் விசாரித்தார். இந்தநிலையில் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி அமல்தாஸ் (வயது35) என்பது தெரியவந்தது. பிரபல ரவுடியான இவர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். பிரபல ரவுடி கறுவா செந்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.

அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து ரவுடி அமல்தாஸ் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள்அமல்தாசை வெட்டிக் கொலை செய்ததுடன் முகத்தை சிதைத்து பிணத்தை ரோட்டில் வீசி விட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று கருதி உப்பளம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகளை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் ரவுடி அமல்தாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News