செய்திகள்
மீனவர்கள் படகு

மீன்பிடி தடைக்கால நிவாரணம் விரைவில் வழங்கப்படும்- அரசு செயலர் உறுதி

Published On 2020-06-30 06:04 GMT   |   Update On 2020-06-30 06:04 GMT
புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என அரசு செயலர் உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா ரூ.5,500 வீதம் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டுக்கான நிவாரணத்தொகை தடை காலம் முடிந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. தடைக் கால நிவாரண தொகை வழங்கக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் கடலில் படகில் சென்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண தொகை வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில் மீன்வளத்துறை செயலர் பூர்வா கார்க் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி வாழ் மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் இயற்கை சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் நல உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவாக திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவானது மீன்பிடி தடைக்காலம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மற்றும் வருமானம் இழந்து தவிக்கும் மீனவ குடும்பங்களை பயனடைய செய்யும். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையானது ஒவ்வொரு மீனவ பயனாளி குடும்பத்திற்கும் ரூ.5,500 வீதம் விரைவில் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது மீன்வளத்துறை இயக்குனர் முத்துமீனா உடனிருந்தார்.
Tags:    

Similar News