காட்பாடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஜூஸ் கடைக்கு சீல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் வியாபாரிகள் கட்டாயம் முக கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.
கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வருபவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காட்பாடியில் சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர். முகக் கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை விருதம்பட்டு காட்பாடி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் நின்று ஜூஸ் குடித்தனர்.
அங்கு சென்று விசாரித்தபோது பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வட்டம் எதுவும் வரையப்படவில்லை. இதனையடுத்து அந்த ஜூஸ் கடைக்கு சீல் வைத்தனர்.
இதேபோல் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு மீன் கடையில் ஆய்வு செய்தபோது 5 பேருக்கு மேல் பணியில் இருந்தனர். இதையடுத்து அந்த மீன் கடைக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வியாபாரிகள் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.