செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

வழிபாட்டு தலங்களை திறக்க விதிகளை தளர்த்த வேண்டும்- பிரதமருக்கு, நாராயணசாமி கடிதம்

Published On 2020-05-30 06:23 GMT   |   Update On 2020-05-30 06:23 GMT
புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களை திறக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக மத வழிபாட்டு தலங்கள் மூடியே கிடக்கின்றன. இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு முடிவடைகிறது. வருகிற 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.

மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இதை செய்ய முடியாது. புதுவையில் தனியார் மயத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கவும் தயாராக உள்ளோம். மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

புதுவை அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு எனது நன்றி. வெளிநாடுகளில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவர்களை அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன். ஒரு சிலர் காங்கிரஸ், தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வேலை செய்கிறார்கள். அவர்களின் எண்ணம் பலிக்காது.

மாநில நிதி நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அரசு ஊழியர் சம்பளம், உதவித் தொகைகளை தடையின்றி வழங்கி வருகிறோம். கவர்னரின் நடவடிக்கையால் அரிசி வழங்குவது காலதாமதம் ஆகிறது. வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தலா 10 கிலோ அரிசி வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News