செய்திகள்
மதுபானங்கள்

விலை உயர்வால் மது பிரியர்கள் அதிருப்தி

Published On 2020-05-26 06:53 GMT   |   Update On 2020-05-26 06:53 GMT
புதுச்சேரியில் தமிழ்நாட்டுக்கு இணையாக மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை தொடங்கியது. அதே நேரத்தில் மதுபானங்களின் விலை தமிழகத்துக்கு சமமாக இருந்தது. புதுவையில் மதுபானங்களின் விலை தமிழகத்தில் இருந்து 30 முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கும். ஆனால் கவர்னரின் அதிரடி நிபந்தனையால் மதுபானங்களிள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து மது பிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

தொழிலாளி சேகர்:- மது பிரியர்களை வரிசையில் நிற்க வைத்து உதாசீனப்படுத்துகிறார்கள். ஏற்கனவே தமிழகத்துக்கு சரக்கு வாங்க செல்ல வைத்து அவமானப்படுத்தினார்கள். இப்போது மிகவும் அதிகமாக விலையை உயர்த்தி உள்ளனர். தற்சமயம் எங்கும் வேலை கிடையாது. கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்தநிலையில் மதுபான விலையை உயர்த்தி எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள். முன்பு இருந்ததைவிட இருமடங்கு விலை அதிகமாக இருப்பதால் உழைக்கும் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. இப்படி விலையை உயர்த்திவிட்டால் மட்டமான சரக்குகளை தான் தேடி வாங்க வேண்டியது வரும்.

தனியார் நிறுவன காவலாளி ரவிக்குமார்:- சின்ன சின்ன கடைகளில் கூட இப்போது வியாபாரம் குறைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் வரியை அதிக அளவு உயர்த்தி மதுபானங்களை விற்கிறார்கள். இது புதுவையின் தனித்தன்மையை பாதித்து விட்டது. வரியை உயர்த்துவதால் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருமானம் குறையுமே தவிர உயராது. எனவே வரியை ரத்து செய்து பழைய விலைக்கே மதுபானங்களை விற்க வேண்டும்.

பவளக்காரன் சாவடியை சேர்ந்த முருகன் :-

கடந்த 40 வருடங்களாக மதுபானம் அருந்தி வருகிறேன். ஆனால் இதுபோல் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டது இல்லை. மதுபான விலையை 2 மடங்கு உயர்த்தி உள்ளனர். இதனால் முன்புபோல் மது வகைகளை சாப்பிட முடியாது. அதில் பாதியாக வாங்கி குடிக்க வேண்டியது தான். இந்த விலை உயர்வினால் ஏழைகளுக்கு தான் அதிக பாதிப்பு. பணக்காரர்கள் எவ்வளவு விலை வைத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் சொற்ப அளவில் சம்பாதிக்கும் ஏழைகள் கஷ்டப்படுவதை இந்த அரசு அனுமதிக்கக் கூடாது. உடனடியாக மதுபான விலையை குறைத்து பழைய விலைக்கே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News