செய்திகள்
மாடுகள்

கால்நடை தீவன விலை உயர்வால் மாடு வளர்ப்போர் கடும் அவதி

Published On 2020-05-25 19:50 IST   |   Update On 2020-05-25 19:50:00 IST
கால்நடை தீவனம், கோதுமை தவிடு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மாடுகளை அடிமாட்டுக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் முக்கிய விவசாயிகள் விவசாயத்தோடு கால்நடைகளை வளர்த்து அதன் மூலமும் வருவாயை ஈட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் கால்நடை தீவனங்கள், கோதுமை தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தீவனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாட்டிற்கு தீவனம் வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரூ.1000-ஆக விற்ற கோதுமை தவிடு தற்போது ரூ. ஆயிரத்து 500 வரை விற்கப்படுகிறது.

அதேபோன்று கால்நடை தீவனம் மற்றும் புண்ணாக்கின் விலையும் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக வழக்கமாக மாட்டிற்கு வைக்கும் தீவனத்தை விட குறைந்த அளவு தீவனம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பால் உற்பத்தியும் குறைந்துள்ளது. இது தொடர்பாக வேதனை அடைந்துள்ள விவசாயிகள் கூறியதாவது:

மாடு வளர்ப்பது என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. கால்நடை தீவனம், கோதுமை தவிடு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மாடுகளை அடிமாட்டுக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மானிய விலையில் கால்நடை தீவனம், கோதுமைத் தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றை வழங்க வேண்டும். இதே நிலை நீடிக்குமானால் மாடுகளை வளர்க்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படும்

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Similar News