செய்திகள்
தற்கொலை

விக்கிரமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2020-05-23 12:45 GMT   |   Update On 2020-05-23 12:45 GMT
விக்கிரமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள முனியன்குறிச்சி மேல தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 39). இவரது மனைவி பரிமளா(35). அதே ஊரை சேர்ந்தவர் பரிமளாவின் தங்கை லட்சுமி. இவர்களின் இருவர் குடும்பத்திற்கும் இடையே பாதை பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பரிமளாவும், இவரது கணவர் முருகேசனும் பிரச்சினைக்குரிய இடத்திற்கு அருகே கழிவறை கட்டுவதற்கு சென்றுள்ளனர். அப்போது பரிமளாவின் தங்கை லட்சுமி கழிவறை கட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பரிமளா கடந்த 17-ந் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை பூட்டி கொண்டு வீட்டினுள்ளே தூக்குப்போட்டு கொண்டார். இதை அறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து பரிமளாவை காப்பாற்றி சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரிமளா பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரிமளா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பரிமளாவின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News