ஊட்டி மலைப்பாதையில் உலா வரும் யானைகள்- வனத்துறை எச்சரிக்கை
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே உள்ளது கல்லாறு பழப்பண்ணை. பலா சீசனையொட்டி இங்கு பலாப்பழங்கள் அதிகம் காய்த்துள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நிலவும் வறட்சியால் குடிநீர் மற்றும் உணவு தேடி காட்டுயானைகள் இடம் பெயர்கின்றன. அப்போது கல்லாறு பழப்பண்ணையில் இருந்து வரும் பலாப்பழா வாசனையால் ஈர்க்கப்பட்டு அதனை தின்பதற்கு யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கின்றன.
இந்நிலையில் யானைகள் சாலைகளிலேயே முகாமிட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் அதிக ஒலி எழுப்பக்கூடாது. வாகனங்களை சாலை யோரத்தில் நிறுத்தக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று முதுமலை மண்டகரை பகுதியில் சுரேஷ் என்பவரின் வீட்டை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தி அங்கிருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது. சேதமடைந்த வீட்டை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.