செய்திகள்
விபத்து

மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய தந்தை

Published On 2020-05-20 11:01 GMT   |   Update On 2020-05-20 11:01 GMT
ஜெயங்கொண்டம் அருகே மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் போதையில் தந்தை மோட்டார் சைக்கிள் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது மகன் அன்பு அமுதன்(4). நேற்று செல்வம் மோட்டார் சைக்கிளில் மகன் அன்பு அமுதனுடன் கடாரங்கொண்டான் கிராமத்தில் உறவினர் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மது அருந்திய அவர் மகனுடன் ஊருக்கு புறப்பட்டார். சிதம்பரம்-ஜெயங்கொண்டம் சாலை புதுச்சாவடி அருகே சென்றபோது செல்வத்திற்கு போதை தலைக்கேறவே சுய நினைவை இழந்து வாகனத்தை ஓட்டினார்.

அப்போது முன்னால் அமர்ந்திருந்த அன்பு அமுதன் தவறி கீழே விழுந்தான். அது கூட தெரியாமல் போதை மயக்கத்தில் செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். அந்த வழியாக சென்ற சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா, அன்பு அமுதனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். செல்வம் வீடு திரும்பாததால் அவரை தேடியபோது, குழந்தை விழுந்த அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி முட்புதரில் நினைவிழந்து கிடந்தார். அவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
Tags:    

Similar News