செய்திகள்
கொடிவேரி அணை

கொடிவேரி அணை மூடப்பட்டதால் வருவாய் இழப்பு

Published On 2020-05-19 15:22 GMT   |   Update On 2020-05-19 15:22 GMT
ஊரடங்கால் கொடிவேரி அணை மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடத்தூர்:

கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. இந்த அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்போது குளித்து மகிழ்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், பண்டிகை, விசேஷ நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், நாமக்கல், பள்ளிபாளையம், மேட்டுப்பாளையம், அவினாசி மற்றும் பல ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பஸ், கார், வேன், இருசக்கர வாகனங்களில் கொடிவேரி அணைக்கு வருவார்கள். அதேபோல கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கவும் சுற்றுலா பயணிகள் வந்து தண்ணீரில் குளித்துவிட்டு செல்வார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த 55 நாட்களாக கொடிவேரி அணை மூடப்பட்டே கிடக்கிறது. சுற்றுலா பயணிகள் யாரையும் குளிக்க அனுமதிக்காததால் அணை வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறையின்போது அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது. அப்போது மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.17 லட்சத்து 9 ஆயிரத்து 225 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அணை மூடப்பட்டதால் ரூ.17 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்து கொடிவேரி அணையில் எப்போது குளிக்க அனுமதிப்பார்கள்? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
Tags:    

Similar News