செய்திகள்
தனிமைப்படுத்துதல்

சென்னையில் இருந்து கோத்தகிரிக்கு வந்த திமுக எம்எல்ஏ- உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

Published On 2020-05-15 17:03 IST   |   Update On 2020-05-15 17:03:00 IST
சென்னையில் இருந்து கோத்தகிரிக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்களை அவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கவும், விடுதியை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவ்வாறு வருபவர்களை தனிமைப்படுத்தியும், வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர்களுடன் சென்னையில் இருந்து கோத்தகிரிக்கு வந்துள்ளார். பின்னர் கேர்கெம்பை என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

சிவப்பு மண்டலமான சென்னையில் இருந்து எம்.எல்.ஏ. ஒருவர் தனது உறவினர்களுடன் கோத்தகிரிக்கு வந்திருப்பதாக வருவாய் ஆய்வாளர் லதாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் லதா, சுகாதார ஆய்வாளர் சுதாகர் மற்றும் சுகாதார துறையினர் அந்த தனியார் விடுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்த விடுதியின் முன்பு தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஒட்டினர்.

மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமையில் இருக்கவும், விடுதியை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News