செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பிற மாவட்டங்களில் சிக்கியுள்ள 10- ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை- செங்கோட்டையன் பேட்டி

Published On 2020-05-14 14:54 GMT   |   Update On 2020-05-14 14:54 GMT
ஊரடங்கு உத்தரவால் பிற மாவட்டங்களில் சிக்கியுள்ள 10- ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஈரோடு மக்கள் ஒத்துழைப்பாலும் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் ,மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த அற்புத பணியாலும் தற்போது ஈரோடு மாவட்டம் பச்சை மாவட்டமாக மாறி உள்ளது. இன்று 29-வது நாளாக எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்படவில்லை. இதற்காக பொதுமக்கள் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு வளம்பெற மாவட்டம் சீராக இருக்க முதல்வர் பல்வேறு பணிகளை செய்து வந்தார். குறிப்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும், நேரடியாகவும் சென்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் காரணமாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்காக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 10-ம் வகுப்பு பொது தேர்வை பொறுத்தவரை மாணவர்கள் பெற்றோர்கள் நலன் கருதியும் கல்வியாளர்கள் ஆலோசனை படியும் பரிசீலித்து முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளார். மற்ற மாநிலங்களில் ஏற்கனவே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று தேர்வுதாள் திருத்தும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் பாதுகாப்புடன் எழுத அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேர்வு மையங்களில் சென்று பார்வையிட வேண்டும். பிற மாவட்டங்களில் சிக்கியுள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி அரசு பரிசீலித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.

மேலும் இது தெளிவான அறிக்கை 19-ந் தேதி வெளியிடப்படும். ஊரடங்கு காலங்களிலும் மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாட்ஸ் அப், யூடியூப் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி ஏற்படுத்திய வரலாறு தமிழகத்தில் மட்டுமே உள்ளது. நீட் தேர்வுக்கு தற்போது ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் 3000 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் தங்க வைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News