செய்திகள்
அசாம் இளம்பெண்ணை தாக்கி பணம்- செல்போன் பறிப்பு
சொந்த ஊருக்கு அழைத்து செல்வதாக கூறி அசாம் இளம்பெண்ணை தாக்கி பணம் மற்றும் செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து சென்றார்.
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வடமாநில இளம்பெண் ஒருவர் மிகவும் சோர்வுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் மயங்கி விழுந்தார். அந்த பெண் முகத்தில் காயம் இருந்தது.
இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன் ஓடிச் சென்று அந்தப் பெண் மீது தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி விசாரித்தார். அந்தப் பெண் இந்தியில் பேசியதால் இந்தி பேசத் தெரிந்த போலீசார் வைத்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண் அசாம் மாநிலம் தேஜ்பூர் அமீன் பட்டியைச் சேர்ந்த அசீனா பேகம் (வயது 24) என தெரியவந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்தது தெரியவந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையில்லாமல் இருந்த அவர் தனது சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக திருப்பூரில் இருந்து கடந்த 2 நாட்கள் நடந்து வந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி உள்ளார். இதை நம்பி அப்பெண் வந்துள்ளார் வரும் வழியில் அந்த பெண்ணை தாக்கி செல்போன், பணம், ஆதார்கார்டு உள்ளிட்வைகளை பறித்து சென்றுவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன் அந்த பெண்ணுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து தனது சொந்த பணம் ரூ.1000 கொடுத்தார். பின்னர் அந்தப் பெண்ணை கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்படும் ஆதரவற்றோர் முகாமில் கொண்டு போலீசார் சேர்த்தனர்.
தனியார் அறக்கட்ட ளையை சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை தற்போது பராமரித்து வருகிறார்கள். ஊரடங்கு முடிந்த பிறகு அந்தப் பெண் சொந்த மாநிலத்திற்கு செல்ல அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.