கவர்னர் மீது வழக்கு- அமைச்சர் ஆவேசம்
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பேடி என் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் கூறாமல், தான் ஒரு திறந்த புத்தகம் என்று கூறி மழுப்பியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை தேசியளவில் கொண்டு செல்வேன். மக்கள் வரிப்பணத்தில் மாதம் ரூ.50 லட்சம் கவர்னர் மாளிகை செலவு செய்கிறது. கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற 4 ஆண்டில் ஒரு ரூபாய்கூட மத்திய அரசிடம் பெற்றுத்தாரவில்லை.
இலங்கையில் உள்ள என் மகனை சொந்த செலவில் சென்று சந்தித்ததை தவறாகக்கூறி திசை திருப்புகிறார். எனது சேவைகளுக்காக பத்மஸ்ரீ விருது பட்டியலில் இருந்த என் பெயரை தலைமை செயலர் மூலம் நீக்கிவிட்டார்.
புதுவை அரசியல்வாதிகள் பணம் கொடுத்து ஓட்டு பெறுவதால் மக்களுக்கு சேவை செய்வதில்லை என கூறியுள்ளார். நான் மதுபாட்டிலோ, பணம் கொடுத்தோ ஓட்டு வாங்கவில்லை. எனவே கவர்னரை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.