செய்திகள்
கரூர் மாவட்டம்

கொரோனா இல்லாத மாவட்டமாக இன்னும் 2 நாட்களில் கரூர் மாறுகிறது

Published On 2020-04-29 13:01 GMT   |   Update On 2020-04-29 13:01 GMT
சிகிச்சையில் இருக்கும் ஒருவர் வீடு திரும்பும் பட்சத்தில் கரூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற வாய்ப்பு உள்ளதாக கூடுதல் டீன் தேரணி ராஜன் கூறினார்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 42 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக பள்ளப்பட்டியில் 20 பேருக்கு உறுதியானது. இவர்கள் அனைவரும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

பின்னர் குணமடைந்த 41 பேர் ஒருவர் பின் ஒருவராக வீடு திரும்பினர். தற்போதைய நிலையில் ஒருவர் மட்டுமே ஆஸ்பத்திரியில் உள்ளார். அவரும் நன்றாக இருப்பதாகவும், குறிப்பிட்ட காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்கள் இருப்பதால் அது முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் கூடுதல் டீன் தேரணி ராஜன் இன்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, சிகிச்சையில் இருக்கும் அந்த நபர் வீடு திரும்பும் பட்சத்தில் கரூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக புதிய தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு கரூர் மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற நாமக்கல் கிராம சுகாதார செவிலியர் ஒருவர் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போதைய நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் கரூர், நாமக்கல், திண்டுக்கல்லை சேர்ந்த மொத்தம் 20 பேர் மட்டுமே உள்ளனர். இந்த மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 159 பேர் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது என்றார்.
Tags:    

Similar News