செய்திகள்
அமைச்சர் கருப்பணன்

ரேஷன் கடைகள் மூலம் 2-வது கட்டமாக ரூ. 1000 நிவாரணம்: அமைச்சர் கருப்பணன் பேட்டி

Published On 2020-04-25 12:36 GMT   |   Update On 2020-04-25 12:36 GMT
ரேஷன் கடைகள் மூலம் 2-வது கட்டமாக மேலும் தலா ரூ. 1000 நிவாரண வழங்க தமிழக முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு சார்பில் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக இந்த மாதம் தொடக்கத்தில் தலா ரூ. 1000 நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதுவரை 97.5 சதவீதம் மக்களுக்கு இந்த நிவாரண உதவி மற்றும் பெருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக  மேலும் தலா ரூ. 1000 மற்றும் இலவச நிவாரண பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாக வழங்க தமிழக முதல்-அமைச்சர் பரிசீலனை செய்து வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும். இது தவிர 500 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News