பெண் குளிப்பதை மறைந்து நின்று பார்த்த தகராறில் மோதல்- 4 பேர் மீது வழக்கு
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு புதுக்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். நேற்று இவரது மனைவி வீட்டு தோட்டத்தில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மஞ்சினியின் மகன் தமிழரசன் (வயது38) என்பவர் மறைந்து நின்று பாண்டியன் மனைவி குளிப்பதை பார்த்து ரசித்து கொண்டிருந்தார். இதை பார்த்து விட்ட பாண்டியன் மனைவி தனது கணவர் மற்றும் மகன்கள் ஸ்டீபன் (21), ஜெகன்(19) ஆகியோரிடம் முறையிட்டார்.
இதையடுத்து ஸ்டீபனும், ஜெகனும் சென்று தமிழரசனிடம் தட்டிக்கேட்டனர். இதில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்டீபனும், ஜெகனும் சேர்ந்து தமிழரசனை சரமாரியாக தாக்கினர். அதுபோல் தமிழரசன் மற்றும் அவரது சித்தப்பா கண்ணபிரான் ஆகியோர் சேர்ந்து ஸ்டீபனையும், ஜெகனையும் திருப்பி தாக்கினர்.
இந்த மோதலில் 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து தனித்தனியே தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.