செய்திகள்
கொரோனா பரிசோதனை

அரசு துறை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-04-25 09:27 GMT   |   Update On 2020-04-25 09:27 GMT
மக்களோடு நெருங்கிப்பழகும் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்களில் நாள்தோறும் 5 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த புதுவை அரசு திட்டமிட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை செயலர் பிரசாந்தகுமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது.

3 பேர் மட்டும் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோய் தொற்று தொடர்வது உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் சமூக பரவல் இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும் மக்கள் நோய் தொற்று பற்றிய பயமின்றி சர்வசாதாரணமாக வீதிகளில் நடமாடி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் நாள்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுவைக்கு நோய் தொற்று பரவ காலதாமதமாகாது. அப்படி வந்தால் புதுவையில் நோய் தொற்று சூழ்நிலையை சமாளிப்பது கஷ்டம். நோய் பரவினால் அதிக பாதிப்பு ஏற்படும். எனவே புதுவை மக்கள் முக கவசம், சமூக இடைவெளியை பின் பற்றுவதுடன், வீணாக வெளியில் நடமாடக்கூடாது. அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா மருத்துவமனைக்கு பரிசோதனை அங்கீகாரம் கிடைத்துள்ளதால் நாள்தோறும் 50 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.

தற்போது மக்களோடு நெருங்கிப்பழகும் துறைகளை சேர்ந்த ஊழியர்களில் நாள்தோறும் 5 பேருக்கு பரிசோதனை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News