புதுவையில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 மருத்துவமனைகளும் கொரோனா பரிசோதனை மையங்களாக இயங்கும். இதன் மூலம் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை செய்து உடனுக்குடன் முடிவுகளை அறிந்து கொள்ள இயலும். கொரோனா தொற்று புதுவையில் ஒன்றாம் கட்டத்திலேயே உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலமாக சமூக தொற்றாக கொரோனா மாறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் சமூக பரவலுக்கான அறிகுறிகள் இல்லை. தமிழகம் கேரளா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களை முறையாக தடுக்கும் பணி நடப்பதால் புதிய நோயாளிகள் வருவது கட்டுக்குள் உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.