செய்திகள்
தனியார் பள்ளி ஆசிரியர்-ஊழியர் சம்பள பணம் வழங்க வேண்டுகோள்

தனியார் பள்ளி ஆசிரியர்-ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்க வேண்டும்: சங்க பொதுச்செயலாளர் வேண்டுகோள்

Published On 2020-04-24 14:28 IST   |   Update On 2020-04-24 14:28:00 IST
தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்று சங்க பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவை தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் பொது செயலாளர் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் உள்ள அரசு உதவி பெறும் 33 தனியார் பள்ளிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 10,11,12-ம் வகுப்பில் 100% தேர்ச்சியை அளித்து வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஒய்வூதியதாரர்களுக்கு 5 மாத காலமாக மாத ஊதியம் வழங்காமல் உள்ளனர். இதுபற்றி அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன் மற்றும் பள்ளி முதல்வர் பஸ்கல்ராஜ், நிர்வாகம் சார்பாக சங்க பிரதிநிதிகளும் முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சர், செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது கொரோனா தாக்குதல் காரணமாக பிரதமர் எந்த ஊழியருக்கும் மாத சம்பளம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார். எனவே புதுவை அரசும்,கல்வி துறையும் உடனடியாக 5 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News