செய்திகள்
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது எடுத்த படம்.

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா இல்லை

Published On 2020-04-24 11:18 IST   |   Update On 2020-04-24 11:18:00 IST
புதுவை சட்டசபை கமிட்டி அறையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே நாள்தோறும் சந்தேகப்படும்படியான நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று சட்டசபைக்கு வந்தனர்.

அங்குள்ள கமிட்டி அறையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலையில் முதல் ஆளாக முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்து, வைத்திலிங்கம் எம்.பி., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், ஜெயமூர்த்தி, சாமிநாதன், சங்கர் மற்றும் அதிகாரிகள் என 56 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது மருத்துவக்குழுவினரால் அவர்களிடமிருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு அந்த மாதிரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் என யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

Similar News