முக கவசம் அணியாமல் வந்த 60 பேரிடம் ரூ 6 ஆயிரம் அபராதம்- போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
பாகூர்:
புதுவையில் கடந்த 20-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதை பயன்படுத்தி பலரும் வெளியே வர தொடங்கினர்.
இதனால் கொரோனா தொற்று ஏற்படும் என சுகாதாரத்துறை எச்சரித்தது. அதனை தொடர்ந்து பழைய நிலை தொடர தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கிராமப்புற சாலைகளை மீண்டும் மூடவும், வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கும்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தர விட்டார்.
இந்த நிலையில் கிருமாம் பாக்கம் மெயின் ரோட்டில் சோதனையில் ஈடுபட்ட போது முக கவசம் அணியாமலும், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தவர்களையும் பிடித்து வழக்குபதிவு செய்தார்.
மேலும் முககவசம் இல்லாமல் வந்தவர்களிடம் ரூ.100 அபராதம் விதித்தார். அப்போது கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உடனிருந்தனர்.
இதுபோல் பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் பகுதியில் உள்ள போலீசார் முக கவசம் அணியாமல் வந்த 60 பேரிடம் ரூ.6 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.