செய்திகள்
புதுவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
புதுவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பு-துவை நகர பகுதி சுய்ப்ரேயின் வீதியில் ஸ்டேட் பேங்க் உள்ளது. இந்த வங்கி வளாகத்திலேயே ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இந்த ஏ.டி.எம். மையத்துக்கு ஒரு வாலிபர் பணம் எடுக்க வந்தார். ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் சொருகி பணத்துக்காக காத்தி இருந்தார். ஆனால் பணம் வரவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். பின்னர் பணம் இருந்த லாக்கரை உடைக்க முயன்றார். ஆனால், லாக்கரை அவரால் உடைக்க முடிய வில்லை. இதற்கிடையே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது குறித்து ஐதராபத்தில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அலராம் ஒலித்தது.
இதுபற்றி அந்த அலுவலக மேலாளர் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து வங்கியின் உதவி மேலாளர் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை தேடி வருகிறார்கள். நகர பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.