செய்திகள்
இலவச அரிசியை வீடு வீடாக வழங்க 50 குழு- அமைச்சர் கந்தசாமி தகவல்
புதுவையில் வருகிற 10-ந்தேதி முதல் இலவச அரிசியை வீடு வீடாக வழங்க 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேசன் அட்டை தாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ இலவச அரிசி மற்றும் ஒரு கிலோ பருப்பு என்ற அளவில் 3 மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து மேற்கண்ட நடவடிக்கைகளை புதுவை அரசு விரைந்து மேற்கொண்டது. அதனடிப்படையில் வருகிற 10-ந் தேதி முதல் இலவச அரிசி மற்றும் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அரிசியானது 15 கிலோ மற்றும் 30 கிலோ என்ற அளவிலான பைகளிலும் பருப்பு 3 கிலோ என்ற அளவிலும் மூன்று மாதங்களுக்கு வழங்க வருகிற 10-ந்தேதி முதல் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலமாக , வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்வதற்காக தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய 50 குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் வழங்கப்படுகிறதோ அந்த பகுதியில் ஒருநாள் முன்னதாக மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களுக்கு அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், நோய் தடுப்பில் இருந்து தங்களை காத்து கொள்ளும் வகையிலும் கூட்டம் சேராத வண்ணம், அரசின் மூலம் நேரடியாக மேற்கண்ட அரிசி மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 78 ஆயிரம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் பயனடைவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.