செய்திகள்
அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமையில் கூட்டம்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 - உணவு பொருட்கள் நாளை முதல் வழங்கப்படும் - அரசு கொறடா தகவல்

Published On 2020-04-01 08:25 GMT   |   Update On 2020-04-01 08:25 GMT
ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்களுடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கப்படும் என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், அரியலூரில் நடந்தது. கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கலெக் டர் ரத்னா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பேசுகையில், ஊரடங்கு உத்தரவையொட்டி தமிழக முதல்- அமைச்சர் அறிவித்துள்ள, ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்களுடன் தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் நாளை(வியாழக்கிழமை) முதல் தொடங்கப்படும். இதில் 440 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 448 தகுதி வாய்ந்த அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாயும், அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை காரணமாக நாள் ஒன்றுக்கு 100 ரேஷன் கார்டுதாரர்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்படும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News