திருப்போரூர் கோவிலில் இடைவெளி விட்டு அமர்ந்து மணமக்கள் திருமணம்- 6 பேருக்கு மட்டுமே அனுமதி
திருப்போரூர்:
திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை 9 திருமணங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக 6 திருமண வீட்டார் தங்களது வீடுகளிலேயே திருமணம் செய்வதாக கூறி விட்டனர். 3 திருமணம் மட்டும் இன்று காலை திருப்போரூர் கோவிலில் நடந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்-வேளச்சேரியைச் சேர்ந்த முத்துமாரி, செங்கல்பட்டு மணிகண்டன்- அம்பத்தூர் கிருஷ்ணபிரியா, புதுபெருங்களத்தூர் சந்திரன்- செம்பாக்கம் அபிராமி ஆகியோர் திருமணம் சிறப்பான நடந்தது.
மணமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இதற்காக தரையில் தனித்தனியாக வட்டம் போடப்பட்டு இருந்தது.
திருமண வீட்டாரில் 6 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதில் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
சின்ன காஞ்சீபுரத்தில் பண்ருட்டியைச் சேர்ந்த பிரசன்னா-காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சண்முகபிரியா ஆகியோர் திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் உறவினர்கள் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.